Thursday 30 August 2012

மாறாதது உன் அன்பு மட்டும்




நடு இரவில் ஏதோ
பயத்தில் அலறும்போதெல்லாம்
உன் உறக்கம் தொலைத்து 
என்னை உறங்க வைத்தாய்...

எதை எதையோ போட்டு
சமைத்து விட்டேன் அம்மா 
எனக்கூறும் தருணங்களில் 
அருமை என அழகாய் பாராட்டுவாய்...

விடியல் கூட அறியாமல் 
அயர்ந்து தூங்கும் தருணங்களில்
தட்டி எழுப்பாமல் 
போர்வையைப் போர்த்திவிட்டு செல்வாய்...

மனம்வாடி பொய் புன்னகையில் 
ஏமாற்ற எண்ணிய பொழுதெல்லாம் 
மடியில் படுக்கவைத்து
ஆறுதல் மொழி கூறுவாய்...

மாற்றங்கள் நிறைந்த உலகினில்
மாறாமல் கிடைத்த
அழகிய பரிசு 
உன் அன்பு மட்டும் தாயே !!!

Wednesday 29 August 2012

நீ வேண்டும்



என்னைப் புரிந்து கொள்ள மட்டுமல்ல
என்னை எனக்கே புரிய
வைக்கவும் நீ வேண்டும்..

என்னை தட்டிக் கொடுக்க மட்டுமல்ல
தவறுகள் செய்யும்வேளை என்னை
கண்டிக்கவும் நீ வேண்டும்..

என் வேலைகளுக்கு உதவியாய் மட்டுமல்ல
என்னை வேலை செய்ய விடாமல்
தொல்லை தரவும் நீ வேண்டும்..

தாய்மையோடு அரவணைக்க மட்டுமல்ல
நான் செல்லம் பாராட்ட
சிறு பிள்ளையாகவும் நீ வேண்டும்..

என்னுடன் கைகோர்த்து நடக்க மட்டுமல்ல
நான் செல்லும் பாதையில்
வழித்துணையாகவும் நீ வேண்டும்..

என் இன்பத்தை பகிர்ந்துகொள்ள மட்டுமல்ல
என் துன்பத்தில் தோள்கொடுத்து
ஆறுதல் சொல்லவும் நீ வேண்டும்..

Monday 27 August 2012

தீண்டல்


காற்று  தீண்டும் வேளை 
மேகம் தன்னை
இழக்கும்  தருணமே ....


 மழை 

தோழி



எத்தனை முயற்சி செய்து
நான் புன்னகைத்த போதிலும்
என் சோகம் அறிபவள்...

என் தாயின் மடி அவள்...


துவண்டு கிடக்கும் தருணங்களில்
என் பலத்தை உணறச் செய்பவள்...


என் சோகங்களின் வலி சிறியதென்று
எனக்கு உணர்த்துபவள்...


எல்லா நேரங்களிலும் என் துணையாய்
இருக்கும் இனியவள்...


என் இனிய தோழி...