Sunday 30 December 2012

நடிப்பு


உன்னை
முழுவதும் மறந்தவனாய்
நான் தோன்றினால் ...

நிச்சயம்
நான் அழகாக நடிக்க
கற்றுக்கொண்டு விட்டேன் ...

மயிலினமே


மயிலினமே,
உன் விரல் தீண்டியே 
புளித்த பழங்களும் 
இனிக்கிறது...

உன்னருகே நின்றிட 
மயில்களின் அழகும்
பொய்மையானது...

உன் செவ்விதழ் மொழிகேட்டு 
குயில்களும் இசைக்க 
யோசிக்கிறது...

அவைகள் படும்பாடு 
போதவில்லையா...
என்னையும் வதைக்காதே 
உன் ஒர விழி பார்வையால்...

Thursday 20 December 2012

பிரிவு

தொலை தூரப் பயணத்திலும்
தொலையாமல் உன் நினைவுகள் ...

சப்தம் நிறைந்த கானகத்திலும்
செவியில் உன் வளையொலிகள்...

காரிருள் சூழ்ந்த போதிலும்
மனதினில் உன் ஒளிமுகம்...

கண்ணயர்ந்து உறங்கினாலும்
கனவினில் உன் தோற்றம்...

என் வரவினை எதிர்நோக்கி நீ அங்கே
உனை சேர துடிக்கும் நான் இங்கே...

நம் இடைவெளிகள் தீர்ந்திடட்டும்
நம் இதயங்களின் வலி உணர்ந்து ....

Monday 17 December 2012

இதழ்கள்

உன்னிடம் பேசப்போவதில்லை 
எனக்கூறிய இதழ்கள்தான்...

உன்னை எதிரினில்
காணும் போதிலும்...

உன் குறும்பினை 
ரசிக்கும் தருணத்திலும்...

ரகசியமாய் புன்னகைக்கிறது
முகத்தினை மறைத்தபடி...

Thursday 13 December 2012

இரவு


விடாமல் துரத்திய
உன் நினைவுகளால்...

விடியல்கூட
அறியவில்லை...

Tuesday 11 December 2012

ஈரேழு உலகிலும் உன் புகழே!!!


மனிதரில் பேதம் பார்த்து 
ஒதுக்கி வைக்கும் கூட்டம்தனில் 
பறவைகளையும், காடு மலைகளையும் 
நம் இனம் என்றீர் ...!

அதிகார பயம்கொண்டு 
வாழ்ந்தோரையும் 
நீர் அச்சமில்லை எனப்பாடி
வீரம் வளர்த்தீர் ...!

இல்லச் சிறையிலிருந்து 
மாதரை விடுவித்த 
முதல் தூண்டுதல் 
உமது கவிதைகளே ...!

எமதர்மரும்
உம் புகழ் உணர்ந்தே 
எருமை வாகனத்தில் வராது 
யானை வாகனத்தில் வந்து 
உம்மை விண்ணுலகம் 
சேர்த்தார் போலும்...!

Tuesday 4 December 2012

தனிமை


அந்தி மாலையில்
தனித்த வேளையில்
நினைவுகள் நிலையில்லை...

சலனமற்ற காற்று
தேகமெங்கும் தீண்ட
உணர்வுகள் எனக்கில்லை...

இதழ்கள் மெளனமாக
விழியசைவின்றி பார்த்திடும்
காட்சிகள் பதியவில்லை...

"தனிமை"
என்னை மறந்த நிலையிலும் 
உன்னை பற்றியே
யோசிக்க வைக்கிறது...

Sunday 2 December 2012

உயிருடன் எரிகின்றேன்


கடும் வெய்யிலில் 
நிழலின்றி 
உணவின்றி 
நீரின்றி 
தவித்த நிலையிலும் ....

இதழ் வறண்டு 
வயிறு ஒட்டி 
கண்ணீர் வற்றி 
உறக்கம் இன்றி 
பசி தாங்கமுடியாப் பொழுதிலும் ....

உயிர் வளர்த்துவிட்டேன் ...!


மகனே,
உன் பசி அழுகையிடம் 
என் தாய்ப்பாலும் வற்றியதென்று 
உணர்த்த இயலாமல்
உயிருடன் எரிகின்றேன் ....


Friday 12 October 2012

நட்பு



என் சோகத்தை பகிர்ந்த,
நட்பின் பிரிவில்,


மீளா சோகம்....

Monday 17 September 2012

தூது



நிலவிடம் சொல்லிவிட்டேன் 
உன் தூக்கத்தை 
கலைக்க விருப்பமின்றி
வந்து விட்டது...!

மேகங்களை அனுப்பிவிட்டேன்
உன்னைப் பின்தொடர
முடியாமல்
கலைந்து விட்டது...!

குயில்களை தூதுவிட்டேன்
உன் குரலைக் 
கேட்டு
மயங்கி விட்டது...!

என் இதழ்கள் சொல்லும் 
என நினைத்தேன் 
தயங்கி தயங்கி
தவிக்கின்றது...!

இறுதியாக...
என் எழுத்துக்களை 
நம்பி இருக்கிறேன்
இதாவது உன்னிடம்
கூறட்டும்

உன் மீது
எனக்குள்ள அன்பினை...

Friday 14 September 2012

ஊடல்



என்மீது அன்பே இல்லை
 என நான் தொடரும் ஊடலில்...


 உன் தவிப்பு காட்டிவிடுகிறது
 என்மேல் உனக்கு இருக்கும் அன்பை...

Wednesday 5 September 2012

நிலா


மேகங்கள் தேடிய
தேடல் நீயே...!

கண்கள் விரும்பிய
காட்சியும் நீயே...!

முகம்மட்டும் காட்டும் 
      தமிழ்த்தாய் மகளே...!

உன்அழகை ரசிக்கவே 
      இரவும் தோன்றியதோ...!

கவிஞர்கள் வர்ணித்த
      அழகின் உருவே...!

நீ உலாவரும்பாதை 
      விண்ணென்று ஆனதோ...!

பௌர்ணமியே உன்னைக்கண்டபின் 
      கடல்அலையும்  எழுமே...!

உன்முகம் பார்த்தே 
      அல்லியும் மலர்ந்ததே...!

விண்ணழகு மேலும் 
      கூடியது உன்முகத்தால்...!

உன்னைக்காணாமல் சென்றதால் 
      சூரியனும் வருந்துமோ...!

உன்னழகுக்கு கோடி 
      விண்மீன்களும் ஈடாகுமோ...!

உன்அழகைப்பாட வார்த்தைகள்தேடி 
      முடிந்தது அகராதி...!

Monday 3 September 2012

பொய் என எண்ணி

உந்தன் நியாயங்களால் எந்தன்
கனவுகள் உயிரற்று போய்விட்டது...

நீ மறுத்து கூறிய வார்த்தைகளால்
என் வார்த்தைகள் மௌனம் ஆனது...

நீ நிராகரித்த நொடி
உலகத்தையே நிராகரிக்க தோன்றியது...


எனினும் ...

உன் வார்த்தைகள் பொய் என எண்ணி 
சமாதானம் செய்து கொண்டேன் 
இந்த உலகத்தோடு 
உன்னையும் பிரியக்கூடும் என்பதால்...

Thursday 30 August 2012

மாறாதது உன் அன்பு மட்டும்




நடு இரவில் ஏதோ
பயத்தில் அலறும்போதெல்லாம்
உன் உறக்கம் தொலைத்து 
என்னை உறங்க வைத்தாய்...

எதை எதையோ போட்டு
சமைத்து விட்டேன் அம்மா 
எனக்கூறும் தருணங்களில் 
அருமை என அழகாய் பாராட்டுவாய்...

விடியல் கூட அறியாமல் 
அயர்ந்து தூங்கும் தருணங்களில்
தட்டி எழுப்பாமல் 
போர்வையைப் போர்த்திவிட்டு செல்வாய்...

மனம்வாடி பொய் புன்னகையில் 
ஏமாற்ற எண்ணிய பொழுதெல்லாம் 
மடியில் படுக்கவைத்து
ஆறுதல் மொழி கூறுவாய்...

மாற்றங்கள் நிறைந்த உலகினில்
மாறாமல் கிடைத்த
அழகிய பரிசு 
உன் அன்பு மட்டும் தாயே !!!

Wednesday 29 August 2012

நீ வேண்டும்



என்னைப் புரிந்து கொள்ள மட்டுமல்ல
என்னை எனக்கே புரிய
வைக்கவும் நீ வேண்டும்..

என்னை தட்டிக் கொடுக்க மட்டுமல்ல
தவறுகள் செய்யும்வேளை என்னை
கண்டிக்கவும் நீ வேண்டும்..

என் வேலைகளுக்கு உதவியாய் மட்டுமல்ல
என்னை வேலை செய்ய விடாமல்
தொல்லை தரவும் நீ வேண்டும்..

தாய்மையோடு அரவணைக்க மட்டுமல்ல
நான் செல்லம் பாராட்ட
சிறு பிள்ளையாகவும் நீ வேண்டும்..

என்னுடன் கைகோர்த்து நடக்க மட்டுமல்ல
நான் செல்லும் பாதையில்
வழித்துணையாகவும் நீ வேண்டும்..

என் இன்பத்தை பகிர்ந்துகொள்ள மட்டுமல்ல
என் துன்பத்தில் தோள்கொடுத்து
ஆறுதல் சொல்லவும் நீ வேண்டும்..

Monday 27 August 2012

தீண்டல்


காற்று  தீண்டும் வேளை 
மேகம் தன்னை
இழக்கும்  தருணமே ....


 மழை 

தோழி



எத்தனை முயற்சி செய்து
நான் புன்னகைத்த போதிலும்
என் சோகம் அறிபவள்...

என் தாயின் மடி அவள்...


துவண்டு கிடக்கும் தருணங்களில்
என் பலத்தை உணறச் செய்பவள்...


என் சோகங்களின் வலி சிறியதென்று
எனக்கு உணர்த்துபவள்...


எல்லா நேரங்களிலும் என் துணையாய்
இருக்கும் இனியவள்...


என் இனிய தோழி...