Sunday, 30 December 2012

நடிப்பு


உன்னை
முழுவதும் மறந்தவனாய்
நான் தோன்றினால் ...

நிச்சயம்
நான் அழகாக நடிக்க
கற்றுக்கொண்டு விட்டேன் ...

மயிலினமே


மயிலினமே,
உன் விரல் தீண்டியே 
புளித்த பழங்களும் 
இனிக்கிறது...

உன்னருகே நின்றிட 
மயில்களின் அழகும்
பொய்மையானது...

உன் செவ்விதழ் மொழிகேட்டு 
குயில்களும் இசைக்க 
யோசிக்கிறது...

அவைகள் படும்பாடு 
போதவில்லையா...
என்னையும் வதைக்காதே 
உன் ஒர விழி பார்வையால்...

Thursday, 20 December 2012

பிரிவு

தொலை தூரப் பயணத்திலும்
தொலையாமல் உன் நினைவுகள் ...

சப்தம் நிறைந்த கானகத்திலும்
செவியில் உன் வளையொலிகள்...

காரிருள் சூழ்ந்த போதிலும்
மனதினில் உன் ஒளிமுகம்...

கண்ணயர்ந்து உறங்கினாலும்
கனவினில் உன் தோற்றம்...

என் வரவினை எதிர்நோக்கி நீ அங்கே
உனை சேர துடிக்கும் நான் இங்கே...

நம் இடைவெளிகள் தீர்ந்திடட்டும்
நம் இதயங்களின் வலி உணர்ந்து ....

Monday, 17 December 2012

இதழ்கள்

உன்னிடம் பேசப்போவதில்லை 
எனக்கூறிய இதழ்கள்தான்...

உன்னை எதிரினில்
காணும் போதிலும்...

உன் குறும்பினை 
ரசிக்கும் தருணத்திலும்...

ரகசியமாய் புன்னகைக்கிறது
முகத்தினை மறைத்தபடி...

Thursday, 13 December 2012

இரவு


விடாமல் துரத்திய
உன் நினைவுகளால்...

விடியல்கூட
அறியவில்லை...

Tuesday, 11 December 2012

ஈரேழு உலகிலும் உன் புகழே!!!


மனிதரில் பேதம் பார்த்து 
ஒதுக்கி வைக்கும் கூட்டம்தனில் 
பறவைகளையும், காடு மலைகளையும் 
நம் இனம் என்றீர் ...!

அதிகார பயம்கொண்டு 
வாழ்ந்தோரையும் 
நீர் அச்சமில்லை எனப்பாடி
வீரம் வளர்த்தீர் ...!

இல்லச் சிறையிலிருந்து 
மாதரை விடுவித்த 
முதல் தூண்டுதல் 
உமது கவிதைகளே ...!

எமதர்மரும்
உம் புகழ் உணர்ந்தே 
எருமை வாகனத்தில் வராது 
யானை வாகனத்தில் வந்து 
உம்மை விண்ணுலகம் 
சேர்த்தார் போலும்...!

Tuesday, 4 December 2012

தனிமை


அந்தி மாலையில்
தனித்த வேளையில்
நினைவுகள் நிலையில்லை...

சலனமற்ற காற்று
தேகமெங்கும் தீண்ட
உணர்வுகள் எனக்கில்லை...

இதழ்கள் மெளனமாக
விழியசைவின்றி பார்த்திடும்
காட்சிகள் பதியவில்லை...

"தனிமை"
என்னை மறந்த நிலையிலும் 
உன்னை பற்றியே
யோசிக்க வைக்கிறது...

Sunday, 2 December 2012

உயிருடன் எரிகின்றேன்


கடும் வெய்யிலில் 
நிழலின்றி 
உணவின்றி 
நீரின்றி 
தவித்த நிலையிலும் ....

இதழ் வறண்டு 
வயிறு ஒட்டி 
கண்ணீர் வற்றி 
உறக்கம் இன்றி 
பசி தாங்கமுடியாப் பொழுதிலும் ....

உயிர் வளர்த்துவிட்டேன் ...!


மகனே,
உன் பசி அழுகையிடம் 
என் தாய்ப்பாலும் வற்றியதென்று 
உணர்த்த இயலாமல்
உயிருடன் எரிகின்றேன் ....